Thursday, April 12, 2012

உபதேச மார்க்கம்


     வாசியோ முறையொன்றும் இங்கு இல்லை,
வாய்விட்டு உச்சரிக்கும் மந்த்ர மில்லை
ஊசிமுனை வாசல்ஒன்றைத் திறந்து காட்டி,
உன்னையே அங்குக்காவல் சிலநாள் வைத்து,
தேசிகனார் ஞானகுரு பார்வை மூலம்
தீட்சைமறு படியுமீந் தழைத்துச் சென்று,
மாசில்லா ஆதிநிலை யறியும் உச்சி
மன்றத்தில் அமர்த்திடுவார்; அமைதி கிட்டும்.


மூச்சு அப்பியாசம் என்னும் பூரகம், கும்பகம், ரேசகம் செய்யும் முறைகள் இந்தத் தவ அப்பியாசத்தில் கிடையாது. நெற்றியல் ஊசி முனை போன்ற ஓர் இடத்தை உனக்குத் தெரியச் செய்து அவ்விடத்திலேயே உன்னை விழிப்போடு மறவாமல் இருக்கச் செய்வார்.

நீ நிலைத்து அவ்விடத்தில் நிற்கக் கூடிய திறனைப் பெற்றவுடன், பார்வை மூலமாக அவர்க எண்ணத்தின் சக்தியை உன் எண்ணத்தில் செலுத்தி, உன்னை நெற்றியிலிருந்து உச்சிக்கு அழைத்துச் செல்லுவார்.

அந்த இடத்தில் நிலைக்க நிலைக்க, எண்ண அலைகளின் எழுச்சியானது குறைந்து, ஒருமை மனப்பான்மை உண்டாகும். அப்போது உன் ஞாபகம், மௌனம் என்ற நிலையாய் நிர்விகற்பமாய் இருக்கின்ற எல்லையையும் பழக்கத்தையும் அடையும். அடுத்தடுத்து இந்நிலையைப் பெற்று, பின் அறிவை விரித்து ஆராய்ந்து. படிப்படியாக, ஆதிநிலை முதல் - & அறிவு நிலைவரை உள்ள சகல தத்துவங்களையும் உணர்ந்து கொள்வாய்.

No comments:

Post a Comment